ரூத்தின் புத்தகம்
முகவுரை:
இந்தப் புத்தகம் தேவனுடைய மீட்பின் சம்பவத்தைக்குறித்த ஒரு தொகுப்பாக இருக்கிறது. இது நியாயாதிபதிகளின் காலக்கட்டங்களின் மத்தியில், தோராயமாக கிதியோன் நியாயாதிபதியாகச் செயல்பட்ட நாட்களில் எழுதப்பட்டிருக்கிலாம் என்று கணிக்கப்படுகிறது. ஒரு மீட்பர் நமக்குத் தேவை என்பதை இது மிகவும் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒரு சிறிய புத்தகமாக, சிறந்த கதையைப்போல இது காணப்பட்டாலும், பெரிய சத்தியத்தையும், நம்முடைய வாழ்விற்குரிய மகத்துவமான போதனையையும் இது வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டிலுள்ள ஒரு சம்பவத்தின் மூலமாக, புதிய ஏற்பாட்டில் தேவனுடைய அன்பை விவரிக்கும் ஒரு படமாக இது இருக்கிறது. 4 அதிகாரங்களில் ஏராளமான அடையாளங்களை உள்ளடங்கிய புத்தகமாக இது இருக்கிறது.
கானான் இஸ்ரவேலருக்குரிய வாக்குத்தத்தத்தின் தேசமாகும். ஆனால் எலிமெலேக்கு என்ற பெத்லகேம் ஊரைச் சேர்ந்தவன், தேசத்தில் உண்டான பஞ்சத்தின்நிமித்தம் மோவாப் தேசத்திற்குச் சென்றான். பெத்லகேம் என்றால் அப்பத்தின் வீடு என்று அர்த்தமாகும். அப்பத்திற்குரிய இடத்தை விட்டுவிட்டு, மோவாப் என்றால், கழுவுகிற தொட்டி என்று அர்த்தமாகும். எலிமெலேக்கு அந்த தேசத்திற்குச் சென்றபோது அவனும் அவனுடைய குமாரர்களும் மரித்துப்போகத்தக்கதாக, கழுவப்பட்ட வெறும் பாத்திரத்தைப் போலானான். எலிமெலேக்கு 3 வசனங்களில் தான் காணப்படுகிறான்.
இந்தப் புத்தகத்தின் முக்கிய நபர்கள்:
•எலிமெலேக்கு தேவன் என்னுடைய ராஜா என்று அர்த்தம்
•நகோமி - இனிமை என்று அர்த்தம்
•மக்லோன் - பாடல் என்று அர்த்தம்
•கிலியோன் - திருப்தி என்று அர்த்தம்
•ஒர்பாள் - முதிர்ச்சியற்றவள் என்று அர்த்தம்
•ரூத் - நட்பு
•போவாஸ் - சீக்கிரம் (Quick)
•மாராள் - கசப்பு: ராஜா (எலிமெலேக்கு), பாடல் (மக்லோன்), திருப்தி (கிலியோன்) மரித்துப் போனதால் அவள் சந்தோஷத்தை (இனிமை) இழந்து, தன்னையே கசப்பிற்குட்படுத்திக் கொண்டாள்.
ரூத்- 1: 19-20 அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள், அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக்குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். 20. அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள், சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார்.
ரூத்தின் குணாதியசம்:
1. தேவஜனத்தண்டைக்குப் போகவேண்டும் என்ற விருப்பம்:
ரூத்-1: 10 உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள்.
2. விடாமல் பற்றிக்கொள்கிற இருதயம்:
ரூத்-1: 14 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள், ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள், ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்.
ரூத் நகோமியைப் பின்பற்றிச் சென்றதற்கு தன்னுடைய தேசத்தில் இல்லாத எதையோ அவள் நகோமியிடமும் கண்டாள். அது அவளை நகோமியோடு நகோமியின் தேசத்திற்கும் நகோமியின் தேவனிடத்திற்கும் செல்லவைத்தது.
ரூத்-1: 16 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேசவேண்டாம், நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன், நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன், உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம், உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
3. வேலை செய்கிற இருதயம்:
ரூத்-2: 2 மோவாபிய ஸ்திரியான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக் கொண்டுவருகிறேன் என்றாள், அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.
4. கீழ்படிகிற இருதயம்:
ரூத்-3: 3, 5,6 குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ, அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு. அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள். அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள்.
5. குணசாலி:
ரூத்-3: 10-11 அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப் படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான் களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. இப்போதும் மகளே, நீ பயப்படாதே, உனக்கு வேண்டிய படியெல்லாம் செய்வேன், நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாம் அறிவார்கள்.
ரூத்துக்குக் கிடைத்த பாக்கியம்:
மத்-1: 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான், போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான், ஓபேத் ஈசாயை பெற்றான்.
போவாஸ்: இயேசுவுக்கு நிழலாட்டமாக இருக்கிறார்.
புறஜாதியாகிய ரூத்தை போவஸ் நேசித்தது, புறஜாதியாராகிய நம்மீது இயேசு நேசம்வைத்து நமக்காக தம்மயே கொடுத்து நம்மைத் தம்முடைய மணவாட்டியாகச் சேர்த்துக்கொண்டது.
1.சுதந்திரவாளி
2.ஆதரிக்கிறவர்
3.விசாரிக்கிறவர்
4.மீட்டுக்கொள்பவர்
5.வாழ்வுகொடுப்பவர்
ஒரு நபருக்கு இரட்சிப்பின் கிருபை எதினால் வருகிறது?
ரூத்-2: 11-12 அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜென்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. 12. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன்கிடைப்பதாக என்றான்.
ரூத்தின் 4 அதிகாரங்களை 4 பகுதிகளாகப் பிரிக்கலாம்:
1.அதிகாரம் 1 மீட்பர் இல்லாமல் நமக்கு நம்பிக்கை இல்லை
2.அதிகாரம் 2 தேவன் ஒரு மீட்பரைக் கொடுக்கிறார்
3.அதிகாரம் 3 நம்முடைய மீட்பருக்கு நாம் கீழ்படிந்திடவேண்டும்
4.அதிகாரம் 4 நம்முடைய மீட்பராகிய கிறிஸ்துவுக்கு நாம் மணவாட்டியாக இருக்கிறோம்.
Comments
Post a Comment