நெகேமியா


முகவுரை:

நெகேமியா, எஸ்றாவின் காலத்தோடு தொடர்புபட்டு பிந்தைய நாட்களில் வாழ்ந்தவராவார். எஸ்றா வேதபாரகனாகவும் ஆசாரியனாகவும் இருந்தார். ஆலயத்தைக் கட்டும் வேலையில் தேவன் அவரைப் பயன்படுத்தினார். ஆனால் நெகேமியாவோ, உலகப்பிரகாரமான வேலைசெய்த ஒரு நபர், பெர்சிய ராஜ்யத்தின் ராஜாவாகிய அர்தசஷ்டாவுக்கு திராட்சை இரசம் ஊற்றிக்கொடுக்கும் வேலைச ெய்து கொண்டிருந்தார் (நெகே-1: 11 நான் ராஜாவுக்குப் பான பாத்திரக் காரனாயிருந்தேன்) அப்படிப்பட்ட சாதராண ஒரு நபரையும் தேவன் தம்முடைய வேலைக்குத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்தினார். எருசலேமின் அலங்கத்தைக் கட்டும் வேலையில் தேவன் இவரைப் பயன்படுத்தினார். ஆலயம்தேவனுக்குரிய ஆராதனையையும், அலங்கம் தேவமக்களுக்குரிய பாதுகாப்பையும் முக்கியப்படுத்துகிறது. ஆவிக்குரிய ஆராதனையும், ஆவிக்குரிய பாதுகாப்பும் நமக்கு அவசியமானதாக இருக்கிறது. தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு ஒரு நபர் விசேஷித்தவராக, முக்கியமானவராக இருந்தாகவேண்டும் என்று அவசியமில்லை. சாதாரணமானவர்களையும் அவர் பயன்படுத்தச் சித்தமாயிருக்கிறார். அரண்மனையிலே கவலையில்லாத ஒரு வேலையில் நெகேமியா இருந்தபோதும், எருசலேமைக்குறித்தும் தம்முடைய மக்களைக்குறித்தும் உள்ள பாரம் அவரைவிட்டு நீங்காதிருந்தது.
நெகே-1: 1-4,11 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயு மாதத்தில் (ஜனவரி மாதம்) நான் சூசான் என்னும் அரண்மனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், 2. என் சகோதரால் ஒருவனாகிய ஆனானியும், வேறே சிலமனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள், அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். 3. அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவார்கள் அந்தத் தேசத்திலே மகாதீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள், எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட் டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். 4. இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: பிரார்த்தித்தேன்.
மக்களுடைய நிந்தையையும், எருசலேமின் அலங்கத்தின் செய்தியையும் குறித்து விசாரித்து அறிந்தார், அது அவரை தேவனைநோக்கி மன்றாடி ஜெபிக்கவைத்தது. ஜெபம் அவரை தேவனுடைய வேலைக்காகப் பயன்படுவதற்குக் காரணமாயிற்று.
வருடங்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் பழைய ஏற்பாட்டை வரிசைப்படுத்தினால், நெகேமியாவின் புத்தகம்தான் கடைசியாக, அதாவது 39ஆவது புத்தகமாக இருக்கவேண்டும். ஆகாயும் (கி.மு.520) சகரியாவும் (கி.மு.520-518) நெகேமியாவுக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு வந்தார்கள். கி.மு.457 வரைக்கும் உள்ளவற்றை எஸ்றாவின் பதிவேடு கொடுக்கிறது. ஆனால் நெகேமியாவோ அதன்பிறகு 12 ஆண்டுகள் கழித்து ஆரம்பிக்கிறார். எருசலேமில் நெகேமியா இல்லாதிருந்த இடைப்பட்ட காலத்தில், அதாவது கி.மு.432ல் மல்கியா தீர்க்கதரிசனம் உரைத்திருக்க வேண்டும். எருசலேமிற்கு நெகேமியாவின் திரும்பவருதல், இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு முன், மனிதனுக்கான தேவனுடைய கடைசிப் பதிப்பாக நம்மை கி.மு.430 வரைக்கும் கொண்டுவருகிறது. நெகேமியாவின் புத்தகம், வழிநடத்துதலிலும், ஆவிக்குரிய காரியத்திலும் அதிகமாக புதியஏற்பாட்டுத் தன்மையை உடையதாக இருக்கிறது. இதிலே ஜெபத்திற்கும் செயலுக்கும் உரிய தொடர்புபடுத்துதல் மிகச்சிறப்பாக உதாரணப் படுத்தப்பட்டுள்ளது.
தானியேல் 9: 24-27ல் சொல்லப்பட்டுள்ள 70 வாரங்களைக்குறித்த தீர்க்கதரிசனத்தின் ஆரம்பத் தேதியை நெகேமியாவின் புத்தகம் ஆரம்பித்து வைக்கிறது.
தானி-9: 24-27 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும் அக்கிரமத்தை நிவிர்த்தி பண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம் பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் (70 x 7 வருடங்கள் = மொத்தம் 490 வருடங்கள்) செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. 25. இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும் (49 வருடங்கள் + 434 வருடங்கள்) அறுபத்திரண்டு வாரமும் செல்லும் (மொத்தம் 69 வாரங்கள், அதாவது 483 வருடங்கள்), அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும், ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். 26. அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார், ஆனாலும் தமக்காக அல்ல, நகரத்தையும் பரிசுத்தஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள், அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும், முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. 27. அவர் ஒரு வாரமளவும் (கடைசி 7 வருடங்கள்) அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார். அருவருப்பான செட்டைகளோடோ பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
எருசலேமைத் திரும்பக் கட்டுவதற்கான கட்டளை கி.மு.444ன் நிசான் மாதத்தில் கொடுக்கப்பட்டது (மார்ச் மாதம் 14ஆம் தேதி). கி.மு.444, மார்ச் 14ஆம் தேதியிலிருந்து 483 வருடங்களை 360ஆல் பெருக்கினால் 1,73,880 நாட்கள் வரும் (ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் என்பது எபிரேயர்களின் காலண்டர் முறை). அப்படியானால் மேசியா சிலுவையில் அறையப்பட்டது கி.பி.32, ஏப்ரல் 6ஆம் தேதியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. தானியேல் புத்தகத்தில் இதைக்குறித்து விவபரமாகப் பார்க்கலாம்.
நெகே-2: 1,4-5,8 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதைஎடுத்து அவருக்குக் கொடுத்தேன், நான் முன்ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. 4. அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, 5. ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதாதேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். 8. தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன், என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

நெகேமியாவின் தொகுப்பு:

(மொத்தம் 13 அதிகாரங்கள் உள்ளன, 2 பகுதிகளாகப் பிரிக்கலாம்)
I. அதிகாரங்கள் 1 முதல் 7: இயற்கையான பாதுகாப்புக்களைப் புதுப்பித்தல்
1. மன்றாட்டு ஜெபத்தால் (1)
2. சொந்த ஜனத்தினிடத்திற்குச் செல்லும் பயணத்தால் (2)
3. வாசல்களின் கட்டுமாணப் பணியால் (3)
மொத்தம் 11 வாசல்களிள் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. வாசல் என்பது நுழைவைக் குறிக்கிறது. நம்முடைய வாழ்வில் ஐம்புலன்களாகிய கண், காது, நாவு, மூக்கு, உணர்வு வாசல்களுக்குச் சமமாக இருக்கின்ற. இவைகள் சரியாகக் கட்டிக் காக்கப்பட வேண்டியது அவசியமானதாக இருக்கிறது.
1. ஆட்டு வாசல்: (3: 1) இயேசு தேவஆட்டுக்குட்டியாக இருக்கிறார். இது நம்முடைய இரட்சிப்பைக் குறிக்கிறது (நம்முடைய ஆரம்பித்தல்)
2. மீன் வாசல்: (3: 3) நம்மை மீன்களைப்போல மனிதரைப் பிடிக் கிறவர்களாக்குவேன் என்று இயேசு சொல்லியிருக்கிறார். இது ஆத்தும ஆதாயம் செய்தலைக் குறிக்கிறது.
3. பழைய வாசல்: (3: 6) தேவனுடைய வார்த்தை நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கிறது எரே-6: 16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4. பள்ளத்தாக்கு வாசல்: (3: 13) நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கும் போராட்டங்கள், பாடுகள். சங்-23: 4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5. குப்பைமேட்டு வாசல்: (3: 14) நம்முடைய வாழ்வின் தேவயைற்றவைகளை அறிக்கையிட்டு அகற்றி சுத்திகரித்தலை இது குறிக்கிறது.
6. ஊரணி வாசல்: ஊற்று வாசல் (3: 15) பரிசுத்த ஆவியானவர் தண்ணீர் ஊற்றாக நமக்குள் பெருகிவழிய வேண்டியதை இது பிரதிபலிக்கிறது.
7. தண்ணீர் வாசல்: (3: 26) தாகமாயிருக்கிறவன் என்னிடத்தில் வரக்கடவன் என்று இயேசு தேவனுடைய வார்த்தையை அறிவித்தது இங்குதான்.
8. குதிரை வாசல்: (3: 28) இயேசு கிறிஸ்து திரும்பப் பூமியின்மேல் வரும்போது வெள்ளைக் குதிரையின்மேல் வருவார், நாமும் அவரோடு குதிரைகளின்மேல் ஏறி வருவோம். (வெளி-19: 11, 14 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன், இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ள வரென்னப்பட்டவர், அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 14. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.)
9. கிழக்கு வாசல்: (3: 29) எசேக்கியேல் 43, 44 அதிகாரங்களில் இதைக் குறித்து நாம் அதிகமாகப் பார்க்கலாம்.
10. பரிசோதனை வாசல்: நம்முடைய வேலைப்பாடுகள் எல்லாம் அக்கினியால் பரிசோதிக்கப்படும். அக்கினியில் நிலைத்திருப்பதற்குப் பலன் கொடுக்கப்படும்.
11. மூலை வாசல்: (எப்பீராயீம் வாசல்) (8: 29, 2நாள்-26: 9)
12. ஆட்டு வாசல்: (3: 32) நாம் ஆரம்பித்த இடத்திற்கே வந்துசேர்கிறோம். எல்லாமே இயேசுவில் ஆரம்பித்து இயேசுவில் நிறைவடைகிறது. (யோவா-5: 2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிறது, அதற்கு ஜந்து மண்டபங்கள் உண்டு).
எருசலேமின் மதிலில் ஒரு பக்கத்துக்கு 3 வாசல்கள் வீதமாக, 4 திசைகளிலும் மொத்தம் 12 வாசல்கள் இருந்தன. இதேகாரியம் புதிய எருசலேமின் மதிலிலும் விவரிக்கப் பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். புதிய எருசலேமின் 12 வாசல்களுக்கும் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களின் நாமங்கள் தரிக்கப் பட்டிருக்கின்றன.
வெளி-21: 10, 12 தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். 12. அதற்குப் பெரிதும் உயரமுமானமதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆக பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. 13. வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள், அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
4. மனம்தளராத செயல்பாட்டின் மூலமாக (4)
சன்பல்லாத்து, தொபியா போன்றவர்களாரல் வந்த எதிர்ப்புகள், மிரட்டுதல்கள், நயவஞ்சகங்கள், பரியாசங்கள் மத்தியிலும், கட்டுகிற வேலையைத் தொடர்ந்து செய்தார்கள்.
5. நியாயமான ஊதியத்தினால் (5)
நெகே-5: 15-18 எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள், அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள், நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை. 16. ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை, அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன், என் வேலைக் காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள். 17. யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புற ஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். 18. நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது, பட்சிகளும் சமைக்கப்பட்டது பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது. இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடின மாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை.
6. உறுதியான குணத்தினால் (6)
சன்பல்லாத்தும், தொபியாவும் ஆசைகாட்டி பேச்சுவார்த்தைக்கு அழைப்புக் கொடுத்துபோது, பயமுறுத்தியபோது, செமாயா என்பவன் மூலமாக கூலிகொடுத்து பொய்த்தீர்க்தரிசனம் சொல்லி ஏமாற்ற நினைத்தபோது, எதற்கும் இணங்காமல் அலங்கத்தின் வேலையிலே உறுதியாக இருந்தார்கள்.
நெகே-6: 15 அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டது.
7. யூதேயாவுக்கு திரும்பிவந்து குடியயேறுவதால் (7)
II. அதிகாரங்கள் 8 முதல் 13: ஆவிக்குரிய தாகத்தைப் புதுப்பித்தல்:
1. தேவனுடைய வார்த்தைக்குக் கவனம் செலுத்துதல் (8)
நெகே-8: 1,4-5,7 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டு வரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். 4. வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான். 5. எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான், அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். 7 லேவியரும், நியாயப் பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப் பண்ணினார்கள். ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். 9. இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள், நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். 10. இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம், கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பதே உங்களுடைய பெலன் என்றான்.
2. பாவங்களை அறிக்கைசெய்தல் (9)
நெகே-9: 2-3 இஸ்ரவேல் சந்ததியார் மறு ஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். 3. அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள், அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது, பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவஅறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டார்கள்.
3. தங்களுடைய வாழ்வை ஒப்புக்கொடுத்தல் (10)
நெகே-10: 27-31 ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப் பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், 29. தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: கொடுக்கப்பட்ட தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட நியாயப் பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், 30. நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும், 31. தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம் பண்ணினார்கள்.
4. ஐக்கியத்தில் தொடருதல் (11)
5. தங்களுடைய துதியை எழுப்புதல் (12)
நெகே-12: 27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டை பண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீத வாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.
6. தங்களுடைய செயல்பாடுகளைச் சுத்திகரித்தல் (13)
நெகே-13: 3-8 பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள். 4. ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங் கலந்தவனாயிருந்து, 5. முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் கட்டளை பண்ணப்பட்ட தானியம், திராட்சரசம், எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம் பண்ணியிருந்தான். 6. இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை, பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப் போய், சில நாளுக்குப் பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, 7. எருசலேமுக்கு வந்தேன், அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்கு தேவனுடைய ஆலயத்துப் பிரகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம் பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன். 8. அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளை யெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன்.

நெகேமியா புத்தகத்தின் சிறப்பு:

இதில் மொத்தம் 14 ஜெபங்கள் உள்ளன. (நெகே-1: 4-11, 2: 4, 4: 4-5, 4: 9, 5: 19, 6: 9, 6: 14, 8: 6, 9: 2-3, 9: 5-38, 13: 14, 13: 22, 13: 29, 13: 31).
எல்லாமே ஜெபத்தால் தான் நிறைவேறுகிறது என்பதை இது முக்கியப்படுத்துகிறது.
நெகே-2: 12 நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகரசோதனை செய்தேன், ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

Comments